சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் 100 கோடி டோஸ்களை கடந்து சாதனை

சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்ற வரும் நிலையில், இன்று செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலக அளவில் 250 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தடுப்பூசி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது.சீனாவின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகு, தடுப்பூசி திட்டம் தொடங்கியது.

வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முந்தைய தடுப்பூசி முறைகேடுகளால் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஒரு மாத காலமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்திருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், 40 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் அதிகாரிகள் செயலாற்றி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *