மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 7.30 மணியளவில் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 161 பேருடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். அந்த விமானம் நடுவானில் சென்றபோது உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அந்த விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.இந்நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துறை இயக்குநகரம் விசாரணைக்கு உத்தரவிட்டது.மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
