டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் லாட்டரி சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார்.அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தில் இப்பணத்தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அவருடைய மாதாந்த சம்பளம் 7000 திர்ஹம் என்பதுடன் அவர் கடந்த 10 ஆண்டுகளாக டுபாயில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தனது 20 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றிபெற்ற பணத்தின் பெரும்பகுதியை தனது குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கும் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
