இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் – தி.மு.க. தலைவர் மு.ஸ்டாலின் ,டிடிவி. தினகரன் ட்விட்டரில் பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரிதும் கவலையுற்றேன். அவர் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வழக்கமான பொதுவாழ்வுப் பணிகளைத் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *