ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவில் ராணுவ தளம் அமைந்துள்ள பாடா நகரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 20 பேர் பலியாகி உள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு வருவதாகவும் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களை லாரிகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் டியோ டோரா ஓபியாங் கூறும்போது, ‘டைனமைட் வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பை அலட்சியப்படுத்தி உள்ளனர். குண்டு வெடிப்பால் பாடா நகரத்தில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகள், கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.இந்நிலையில், இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
