இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிங்க் பால் டெஸ்ட் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.ஆனால் ஆடுகளத்தில் இன்று முதல் நாளில் இருந்தே ஸ்பின் பந்து வீச்சு அதிக அளவில் டர்ன் ஆனது. இதை பயன்படுத்தி அக்சார் பட்டேல் 6 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது இந்தியா. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இணைந்து ரோகித் சர்மா, ஷுப்மான் கில்லை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். இருந்தாலும் ஷுப்மான் கில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பினார்.இங்கிலாந்து பந்து வீச்சை மாற்றியது. ஜாஃப்ரா ஆர்ச்சரை களம் இறக்கியதும் ஷுப்மான் கில் 11 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தத புஜாரா யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேக் லீச் பந்தில் டபிடபிள்யூ ஆக டக்அவுட்டில் ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜேக் லீச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 27 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.கடைசி 4 பந்து மீதமுள்ள நிலையில் ரஹானே களம் இறங்கினார். அவர் மூன்று பந்தை சமாளிக்க ரோகித் சர்மா ஒரு பந்தை சந்தித்தார். இவரும் ஆட்டமிழக்கவில்லை. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது.இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் நிதானமாக நின்று அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.