மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் கடுமையான அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.மியான்மர் ராணுவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியாக போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்தி மிரட்டுவது மற்றும் துன்புறுத்துவது ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐநா பொதுச்செயலாளர் கூறி உள்ளார்.இதனையடுத்து அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க இணையத்தில் கடும் கண்டனம் குவிந்தது. பேஸ்புக் தளம் மியான்மர் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கி வருகிறது.

போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரு போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் முன்னதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தப் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை பேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவ பக்கம் மீறி வந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *