கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக பரவத் தொடங்கியது பின்னாட்களில் உலகுக்கு பெரும் சவாலாக அமைந்தது .அந்த வைரசின் சீற்றம், இப்போது தணியத்தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் பல நாடுகளிலும் குறைந்து வருகிறது. இது உலக நாடுகளையெல்லாம் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-
தொடர்ந்து 4-வது வாரமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது வாரமாக கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கை சரிந்துள்ளது.பல நாடுகளிலும் பொதுசுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தியதின் விளைவுதான் இது என்று தோன்றுகிறது. இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரசைப் போலவே ஆபத்தானது.தற்போது கட்டுப்பாடுகளை எந்த நாடுகளும் தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது. அதே போன்று எந்த தனிநபரும் கொரோனா கால பாதுகாப்பு அம்சங்களை குறைப்பதற்கான தருணமும் அல்ல இது .தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்து வரும் ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்துக்குரியதுதான்.கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய உகான் நகருக்கு சமீபத்தில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றது. அவர்கள் கண்டறிந்துள்ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.