மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் மியான்மர் அரசியலில் இராணுவம் இன்னும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.இந்நிலையில் மியான்மர் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நேற்று 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது.போலீசாரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மாண்டலே ஆகிய நகரங்கள் மக்களின் தொடர் போராட்டங்களால் அதிர்ந்து வருகிறது.
நேற்று யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களின் பிரதான சாலைகளில் அணிவகுத்து சென்ற போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.அதேபோல் ரங்கூன் நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.இதற்கிடையில் மியான்மரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.அந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையா் நடா அல்-நஷீப், ‘மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான உழைப்பின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்துவிட்டது. இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்தாா்.அதனைத் தொடா்ந்து இங்கிலாந்தும் ஐரோப்பிய கூட்டமைப்பும் வரைவு தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மைன்ட் மற்றும் மற்ற அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் தனது பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கான உதவிகள், ஆதாரங்களை அளிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் மிஷெல் பஷேலே ஆகியோரை அந்த வரைவு தீா்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.47 உறுப்பினா்களை கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்கெடுப்பு நடத்தாமலேயே ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. இருப்பினும் ரஷியாவும், சீனாவும் இந்த ஒருமித்த கருத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதாக பின்னர் அறிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *