சீனாவின் நடவடிக்கை,உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் – பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி

சீனாவில் தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் , சித்திரவதை மற்றும்  அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது மேலும் “பத்திரிகையின் உண்மைத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை பிபிசி மீறியது” என குற்றம் சுமத்தி ஒளிபரப்பு நெறிமுறைகளை மீறியதாக பிபிசி உலக செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கைக்கு, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி டோமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது, என அவர் தெரிவித்துள்ளார்.உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் இணைய சுதந்திரத்திற்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.பிரிட்டனில் சமீபத்தில் சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் (சிஜிடிஎன்) ஒளிபரப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டது. பிரிட்டன் சட்டத்தை மீறியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் பணிகளுக்கும் பிரிட்டனில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *