இளவரசர் சார்லஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

இங்கிலாந்து இராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்ல்சுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவி வரும் அதே வேளை தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்து என்பதும் குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை 1 கோடி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து இராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் இராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்ல்சுக்கும் [வயது 72] நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவரது மனைவி கமிலாவும் [வயது 73] தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இளவரசர் சார்ல்ஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *