முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது எவ்வித முடிவும் எடுக்ககாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதற்கிடையே, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஆணையட்டும் ,தமிழக ஆளுநர் எவ்வித முடிவையும் அறிவிக்காமல் 12 நாட்களாக மவுனமாக இருந்து வந்தார் . ஆளுநரின் முடிவு என்ன என்றே தெரியாத நிலை இருந்தது.இந்த நிலையில் ஏழு பேரை விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு தமிழக ஆளுநர் பிரமாண பத்திரம் மூலம் தகவல் அளித்துள்ளார்.தமிழக அரசின் பரிந்துரையை கடந்த மாதம் 25-ந்தேதியே நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அவமதிப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 161, அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தை மறுத்த தன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்துள்ளார் என்றே கருத வேண்டி உள்ளது.இது ஆளுநரின், மோடி அரசின் தமிழர் விரோத மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.ஏழு தமிழரையும் விடுதலை செய்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு கூறுகிற அதே நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரோல் வழங்க மறுக்கிறது. இதிலிருந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது என்பதை உணரமுடிகிறது.பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், உடனடியாக மீண்டும் சட்டப்பேரவையில் அல்லது அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.