சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹொங்கொங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு நேற்று ஆரம்பித்துள்ளது.பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹொங்கொங் இருந்தபோது, அப் பிராந்திய மக்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997ஆண்டு ஆண்டு வரை வழங்கக்கூடிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹொங்கொங்கில் அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாராவது ஒருவர் பிரித்தானியாவில் குடியேற பதிவு செய்திருந்தால் அவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறி பிரித்தானியாவை கண்டித்தது.மேலும் ஹொங்கொங் மக்களுக்கு பிரித்தானியா வழங்கியிருந்த கடவுச் சீட்டு இனி செல்லாது எனவும் சீனா அறிவித்தது.இந் நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹொங்கொங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு நேற்று தொடங்கியது.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புதிய விசாவைப் பெற விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானியாவின் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹொங்கொங் மக்களுக்கான புதிய விசா திட்டம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில், “இந்த நடவடிக்கை பிரித்தானியா முன்னணி காலனியான ஹாங்காங்குடன் பிரித்தானியா வரலாறு மற்றும் நட்பின் ஆழமான உறவுகளை கௌரவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹொங்கொங்கில் அமுல்படுத்தியதற்கு ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சீனாவை சீனாவை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.