மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் மியான்மர் அரசியலில் இராணுவம் இன்னும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.இந்நிலையில் மியான்மர் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆங் சான் சூகியி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஒரு காலத்தில் ஜனநாயக சார்பு ஆர்வலருமான சூகி இராணுவத்தால் வீட்டுக் காவலில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சிறைபிடிக்கப்பட்டவர்.இதன் காரணமாக அவர் மியான்மரில் அனைவருக்கும் பிடித்த இருந்தார் , ஆனால் ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினரை துன்புறுத்துயது தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.மியான்மரில் ராணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையும் , சர்வதேச மன்னிப்பு சபையும் இந்த ராணுவ புரட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.