அமெரிக்காவின் பிரபலமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் தெற்கு ஆசியப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிந்தவர் டேனியல் பியர்ல். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான தொடர்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த 2002-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார்.அப்போது சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டேனியலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அடுத்த சில நாட்களில் பயங்கரவாதிகள் அவரின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக இங்கிலாந்து வம்சாவளியும், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அகமது உமர் சயீத் ஷேக் உள்ளிட்ட 4 பேரை சிந்து மாகாண போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்றது.இந்த வழக்கில், 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து சயீத் ஷேக் உள்ளிட்ட 4 பேரும் சிந்து மாகாண ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு முக்கிய குற்றவாளி சயீத் ஷேக்கின் மரண தண்டனையை ரத்து செய்து, அவரது சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரையும் விடுதலை செய்தது. இதனை அமெரிக்கா வன்மையாக கண்டித்தது.அதனைத் தொடர்ந்து அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சிந்து மாகாண அரசு மேல்முறையீடு செய்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்றுமுன்தினம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, சயீத் ஷேக் உள்ளிட்ட 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சயீத் ஷேக் உள்ளிட்ட 4 பேர் மீதும் அமெரிக்கா வழக்கு தொடர அனுமதிப்பது உட்பட அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.