மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் மு.க.ஸ்டாலினுடன் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இது தொடர்பாக பேசிய அவர், “மக்கள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஜனவரி 29ம் தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். கொரோனா காலத்தில் மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது; குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரின் வாழ்க்கையையும் நிர்கதியாக்கி விட்டது.
புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளனர். தமிழகத்தின் கடன் சுமையை ரூ.5 லட்சம் கோடியாக மாற்றியது தான் அதிமுகவின் சாதனை. தமிழகத்தில் விலைவாசி விஷம் போல் உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு, சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை. தமிழக மக்களை அதிமுக அரசு முழுமையாக கைவிட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது.
மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி. மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
தேர்தல் அறிக்கை வேறு, விண்ணப்பத்தில் மக்கள் குறைகள் எழுதி கொடுத்தால் போதும், மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை ஸ்டாலின்அணி என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள். சொன்னதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு ஏற்பவே, தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளேன். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.