இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தான். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி தயாரித்துக்கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கிடையில், நல்லெண்ண அடிப்படையில் பிரேசில், பூடான், மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது.மேலும் சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விரைவில் வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு பல நாடுகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்க்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் .இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு தனது டுவிட்டர் தளத்தில், ‘தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். ஒரு உண்மையான நண்பனாக, சர்வதேச சமூகத்துக்கு தனது மருத்துவ துறையை இந்தியா பயன்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளது.