ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் .ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் காபூல் ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் பெண் நீதிபதிகள் 2 பேர் ஒரே காரில் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நீதிபதிகளின் காரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் பெண் நீதிபதிகள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும் அண்மைக் காலமாக காபூலில் நடக்கும் அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்று வருகின்றனர். எனவே இந்த தாக்குதலையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே நடத்தி இருப்பார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.