இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அனுமதி பெற்றுள்ளது.கோவிஷீல்டு என்ற பெயரில் அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த 2 தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்றது . தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 1,91,181 லட்சம் பேருக்கு தடுப்பூசி இன்று போடப்பட்டது .இந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்ததும், முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளர் மணிஷ் குமாருக்கு செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மற்றவர்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காவலாளியாக செயல்பட்டுவந்த நபருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நபருக்கு அலர்ஜி ஏற்பட்டது.இதையடுத்து, ஒவ்வாமை ஏற்பட்ட அந்த நபர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவலாளிக்கு கோவாக்சின் போடப்பட்டதா? அல்லது கோவிஷீல்டு போடப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை.