அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் .டிரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய இந்த கலவரம் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று பல அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். மேலும், வெள்ளைமாளிகையில் உள்ள அதிகாரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடலில் வன்முறை நடைபெற்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் ஹாவர்டு லைபென்குட் (51) என்ற போலீஸ் அதிகாரியும் ஒருவர்.
பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கேப்பிடல் கட்டிட தாக்குதல் சம்பவம் நடந்து 3-வது நாட்கள் கடந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஹாவர்டு லைபென்குட் இன்று (10-ம் தேதி) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பணிக்கு செல்லாத நிலையில் வீட்டில் இருந்தபோது அவர் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ’டெய்லி மெயில்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிட வன்முறை சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹாவர்டு லைபென்குட் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் அதிகாரி ஹாவர்டு லைபென்குட் பாராளுமன்ற வன்முறையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருக்கும் பட்சத்தில் இந்த வன்முறை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.