யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்பு
தரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, மற்றும் உயிரிழந்தவர்களிற்கான பொதுவான நினைவுத்தூபி என்பனவே பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்படுகின்றன. ஒரு தூபி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. மற்றைய தூபி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.தூபிகளை இரவிரவாக அழித்து, இடிபாடுகளை அகற்றிவிட பாதுகாப்பு தரப்பு மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க, இலங்கை இராணுவம், பொலிசாரின் துப்பாக்கி முனை மிரட்டல்களின் மத்தியில் தமிழ் மக்கள் அங்கு குவிந்து பல்கலைகழக வாயில்களை மறித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இரவிரவாக போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ள தமிழர் தரப்பு, போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ் மக்களிடமும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *