சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் ஹாங்காங்கில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் தொடங்கப்பட்டது .சுமார் 6 மாதம் நீடித்த இந்த போராட்டத்தின்போது ஒரு சில வன்முறை சம்பவங்களும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது
கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய இந்த போராட்டங்கள்,நாளடைவில் சீன அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.
எனினும் ஹாங்காங் அரசின் உதவியோடு சீனா இந்த போராட்டத்தை ஒடுக்கியது. அதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற சீன விரோத போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்தது.இச்சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் சீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதும் ஜனநாயக ஆர்வலர்கள் பலர் ஹாங்காங்கை விட்டு வெளியேறினர். ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பல ஜனநாயக அமைப்புகள் கலைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 2019-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பதை அறிவதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது இந்த வாக்கெடுப்பில் சுமார் 60 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்க இருந்த நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசின் அனுமதியின்றி பொதுவாக்கெடுப்பு நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட 50 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கைக்காக ஹாங்காங்கில் நேற்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அவர்களை கைது செய்தனர்.
ஹாங்காங்கின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சி மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் பொது வாக்கெடுப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு நடந்த மிகப பெரும் கைது நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் இது சீன அரசாங்கத்தின் அடக்குமுறையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.