இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இன்று இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கொரோனா தொற்றுநோய் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது.
இதேபோல் கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதில் இலங்கை ஆர்வமாக உள்ளது.
வளர்ந்து வரும் கடல்சார் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா தயாராக இருக்கிறது.
மீன்வளம் தொடர்பான இந்தியா- இலங்கை கூட்டு செயற்குழு சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட எங்கள் மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.
அவர்கள் விரைவில் நாடு திரும்புவதை எதிர்பார்க்கிறோம் என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனா முன்னிலையில் அவர் கூறினார்.