ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 பிரான்ஸ் படையினர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களாக உருவெடுத்து பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவம் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளும் மாலியில் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மாலி அரசுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 416 பேர் படுகாயமடைந்தனர்

இந்த தாக்குதலை தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலை பிரான்ஸ் அதிகப்படுத்தியது. இந்நிலையில், மாலியின் மேனகா மாகாணத்தில் ஒரு காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பிரான்ஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, பிரான்ஸ் படையினர் சிலர் தங்கள் ராணுவ வாகனத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிக்கு சென்றனர்.

படையினர் சென்ற வாகனம் காட்டுப்பகுதி அருகே சென்றபோது பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது.
இந்த கண்ணிவெடி தாக்குதலில் பிரான்ஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சில வீரர்கள் காயமடைந்தனர்.

மாலியில் பயங்கரவாத தாக்குதலில் பிரான்ஸ் படையினர் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *