தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்- முக ஸ்டாலினை விமர்சிக்க அருகதை இல்லை.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தி.மு.க.வினர் வீட்டுக்காக உழைத்து வருகிறார்கள்’ ‘சென்னை மேயராக முக ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா?’

என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புலம்பியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சரின் கண்களுக்கு ‘கமிஷனும்’, ‘கலெக்சனும்’ மட்டுமே தெரிகிறது.

அதனால் எங்கள் தலைவர் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராகச் சென்னை மாநகரத்திற்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய சாதனைகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

தி.மு.க. ஆட்சியில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சராக எங்கள் தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் ஆற்றிய பணிகள் எப்படித் தெரியும்? மேடையில் அமர்ந்திருப்பவர்கள் மிட்டா மிராசுகளோ, தொழிலதிபர்களோ இல்லை என்று கூறியிருக்கிறார் முதல்- அமைச்சர். அவர்கள் அந்த நிலையையும் கடந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. அ.தி.மு.க. மேடையில் இருந்தவர்கள் ஊழல்வாதிகள்.

தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. வரலாறும் தெரியாது. தி.மு.க. சாதனைகளும் புரியாது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளைத் தனியாக ஒரு அறையில் இருந்து படித்துப் பாருங்கள். அப்போது, தெரியும் அண்ணாவும், கருணாநிதியும் இந்த மாநிலத்துக்கு என்ன சாதனை செய்தார்கள் என்று தெரியவரும்.

ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் தி.மு.க. பற்றியோ, எங்கள் தலைவர் பற்றியோ விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது? முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *