வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் மற்றும் நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் ஆப்கான் மக்களுக்கு அமெரிக்க படைகள் உதவின.

காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்களை அனுப்பினர். இதையடுத்து காபூல் விமான நிலையம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.இதற்கிடையே கடந்த 26-ந்தேதி காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தினார்கள். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 182 பேர் பலியானார்கள்.

இதற்கு பதிலடியாக கடந்த 29-ந்தேதி அமெரிக்கா சிறிய ரக ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதில் பலியானவர்கள் 10 பேரும் பொதுமக்கள் என்றும் அதில் 7 குழந்தைகளும் அடங்குவர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள்தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாகவும் இது ஒரு சோகமான தவறு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் அகஸ்டின் கூறியதாவது.பொதுமக்கள் மீதான இந்த தவறான தாக்குதலுக்கு வருந்துகிறோம். இதற்கான மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான பிழையில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *