இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இந்நிலையில் ஹெட்டிங்க்லேயின் லீட்ஸ் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இறுதியில் இந்திய அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. நேற்று முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் இருந்தது. பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மீண்டும் சிறப்பாக ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்களில் ரோரி பர்ன்ஸ் 61 (153) ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹசீப் ஹமீத், ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலான் 27 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 14 ரன்களும் எடுத்து தற்போது ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
தற்போது உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 68 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர். இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணியை விட 104 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.