தடுப்பூசி போட்டால் தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு தகவல்

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த ஆய்வு நடந்தது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிராத நிலையில், தாய்ப்பாலூட்டி வந்த 21 தாய்மார், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 3 முறை தாய்ப்பால் மற்றும் ரத்த மாதிரிகளை வழங்கினர். முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் தாய்ப்பால், ரத்த மாதிரிகளை அளித்தனர். அவற்றைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.அதன் முடிவுகள் ‘பிரெஸ்ட் பீடிங் மெடிசின்’பத்திரிகையில் வெளியாகி உள்ளது.அதில் பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், “தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது” என குறிப்பிட்டார்.குழந்தைகள் பிறக்கிறபோது, அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ச்சி அடையாது. எனவே அவர்கள் தொற்றுக்கு எதிராக சொந்தமாக போராடுவது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *