பேரறிவாளனின் பரோல் காலத்தை நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை ஏற்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதன்படி கடந்த மே மாதம் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜூலை 28-ம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்தநிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *