ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சரியானது அல்ல. இன்னும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு காரணமாக சில ஊழியர்கள் வெளியேறிவிட்டதாகவும், அவசர தேவைக்காக மட்டும் தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக,கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம்தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன்பிறகு அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன.தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்த போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப்பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வந்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.எனினும் ‘‘ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளுக்கு ராணுவ நடவடிக்கை தீர்வு அல்ல. இது ஒரு வெல்ல முடியாத போர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் பணி ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது’’ என் அமெரிக்க அதிபர் ஜே பைடன் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். அரசு படையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ராணுவ விரர்கள் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடியுள்ளனர்.கடந்த மூன்று நாட்களில் 10 மாவட்டங்கள் தலிபான் வசம் சென்றுள்ளன. இதில் 8 மாவட்டங்களை எவ்வித சண்டையும் போடாமலேயே தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.