பதவியை ராஜினாமா செய்தார் ஸ்வீடன் பிரதமர்

ஸ்வீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபன் (வயது 63) மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ராஜினாமா செய்துவிட்டு புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், பிரதமர் ஸ்டீபன் லோபன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். பிரதமர் லோபன் பதவி விலகினாலும், புதிய அரசு அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.இதுபற்றி ஸ்டீபன் லோபன் கூறுகையில், கொரோனா தொற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்த முடிவல்ல என்று கூறினார். மாற்று தலைமையை முடிவு செய்யாமல், தனக்கு எதிராக வாக்களித்ததாக ஸ்டீபன் லோபன் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *