ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் தமிழக ஆளுநர் பதிலுக்கு வைகோ கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது எவ்வித முடிவும் எடுக்ககாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதற்கிடையே, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஆணையட்டும் ,தமிழக ஆளுநர் எவ்வித முடிவையும் அறிவிக்காமல் 12 நாட்களாக மவுனமாக இருந்து வந்தார் . ஆளுநரின் முடிவு என்ன என்றே தெரியாத நிலை இருந்தது.இந்த நிலையில் ஏழு பேரை விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு தமிழக ஆளுநர் பிரமாண பத்திரம் மூலம் தகவல் அளித்துள்ளார்.தமிழக அரசின் பரிந்துரையை கடந்த மாதம் 25-ந்தேதியே நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக கவர்னரின் முடிவுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி, சிறைக் கைதிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் எதிர் இந்திய அரசு வழக்கில் 1981-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு மிகத் தெளிவாக வழி காட்டுதல் அளித்திருக்கின்றது.மாரூராம் வழக்கில் ஏற்கனவே மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கின்றது என்று தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கின்றது.அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163 (1) இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கவர்னருக்கு இருக்கிறதே தவிர, கவர்னர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.ஆனாலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், 7 தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது அநீதியாகும்.மத்திய அரசும், தமிழக கவர்னரும், அ.தி.மு.க. அரசும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *