லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மெக்சிகோ உள்ளது.மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் முறையாக கையாளவில்லை என்கிற விமர்சனம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.
அதற்கு ஏற்றார்போல் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் பொது நிகழ்வுகளில் பெரும்பாலும் முக கவசம் அணியாமல் கலந்து கொள்வது, மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டத்தை சேர்ப்பது, அடிக்கடி பொது விமானங்களின் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ‘‘மெக்சிகோ மோசமான நிலைமையில் உள்ளது. மெக்சிகோவின் தலைவர்கள் கொரோனா வைரசை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நாட்டு குடிமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்’’ என கூறினார்.
ஆனாலும் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் முறையாக கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது.மேலும் முழு ஊரடங்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
67 வயதான லோபஸ் ஒப்ரடோருக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம் வாரத்துக்கு ஒருமுறை அவர் கொரோனா பரிசோதனையை மட்டும் மேற்கொண்டு வந்தார்.
அந்தவகையில் நேற்று அவருக்கு வழக்கம் போல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர் ‘‘நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.எனக்கு லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.