கலைஞர் கருனாநிதியின் மகனும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து கருனாநிதியால் நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் ஸ்டாலின் தலைமை அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில்,வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார்
இந்த ஆலோசனை கூட்டத்தின் பின் முக அழகிரி கூறியதாவது:-
தமிழகத்தில் முக ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது.
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்று தந்தை கூறும் போது நான் உடனேயே ஒப்புதல் தந்தேன்.ஒரு தடவை ஸ்டாலின் குடும்பத்துடன் என் வீடு வந்தபோது நானே அவரிடம் கூறினேன் அப்பாவிற்கு பிறகு நீ தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அதன் பின் தம்பிக்கு துணை முதல்வர் பதவி என தந்தை கூறினார். நான் சம்மதித்தேன்
உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர்
என பல்வேறு கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.மேலும் தனது அரசியல் முடிவை வெகு விரைவில் அறிவிப்பதாக ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.அழகிரி கூறிய குற்றச்சாட்டுகள் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .