தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவர் மூன்று முறை நன்றி தெரிவித்திருப்பது ஆச்சர்யமான ஆரோக்கியமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அண்மையில் ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார்.இந்நிலையில் அடுத்த ஒரு நாளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
