வரும் 6ஆம் தேதி முதல் இந்திய பயணிகளுக்கான தடை நீக்கம் பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.

கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்திருந்தது. சூழலுக்கு ஏற்ப இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் மீதான பயண தடையை நீக்கி, பயணிகளை வரும் 6ஆம் தேதி முதல் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வழங்கியுள்ளார்.

பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பயண தடையை நீக்க அரசு முடிவு செய்திருக்கிறது. எனினும், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *