மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் மியான்மர் அரசியலில் இராணுவம் இன்னும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.இந்நிலையில் மியான்மர் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.இந்நிலையில் அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 7 ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம் தடை விதித்தது.மேலும் போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், ராணுவ ஆட்சியை கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியை விடுவிக்க வலியுறுத்தியும் யாங்கோனில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் நடத்துகிற ஒத்துழையாமை இயக்கத்தில் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது.இந்நிலையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருந்திரளாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர்.