
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்பு
தரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப்
பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்,
2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு
நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய அரசு இடித்தழித்துள்ளது.அரசின் மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைகழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் குவிய ஆரம்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பல்கலைக்கழக சூழலில் பெருமளவான பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்களிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.