யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழப் போரின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்து தள்ளியுள்ளனர். இச்சம்பவம் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்பு ஒன்றுகூடிய தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *