ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 1986ம் ஆண்டில் இருந்து என்ஆர்எம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் யோவேரி முசவேனி அதிபராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில்,உகாண்டாவில் கடந்த 14ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. யோவேரி முசவேனி 6 வது முறையாக மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து என்யுபி கட்சி சார்பில் முன்னாள் பாப் பாடகரான பாபி வைன் போட்டியிட்டார்.தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முசவேனி வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 6வது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்க உள்ளார். முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் அடக்குமுறைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான என்யுபி கட்சி தலைவர் பாபி வைன் குற்றம் சாட்டி உள்ளார்.தேர்தலுக்கு முன்னதாக இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் துண்டிக்கப்பட்ட இணையதள தொடர்புகள் மீண்டும் வழங்கப்படும்போது, வாக்குப்பதிவில் நடந்த மோசடிகளை ஆதாரங்களுடன் தெரிவிப்பதாக பாபி வைன் கூறி உள்ளார்.ஆனால் இக்குற்றச்சாட்டினை அதிபர் யோவேரி முசவேனி மறுத்துள்ளார்.