லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். மாஸ்டர் படக்குழுவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. சினிமா ரசிகர்களுக்கு இது மிகச் சிறந்த செய்தி. மாஸ்டர் திரைப்படம் மூலம் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் செழிக்கும் என நம்புகிறேன்.
தியேட்டர் அனுபவம் போல எதுவும் கிடையாது. தேவையான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு படத்தைத் தியேட்டரில் சென்று பாருங்கள்” என தனுஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.