மலேசிய பிரதமர் முகைதின் யாசின் ராஜினாமாவை தொடர்ந்து புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தேர்வு

மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக முகைதின் யாசின் பதவி ஏற்றார். கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் முகைதின் யாசின் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார்.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் முகைதின் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மன்னர் நியமித்துள்ளார். இஸ்மாயில் சப்ரிக்கு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேர் ஆதரவு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் ஒரு வருடத்திற்குள் மூன்று பேர் பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *