தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள நாடுகளில் போர்ச்சுக்கல் ஒன்றாக இருந்து வருகிறது.இந்த சூழலில் கடுமையான கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் போர்ச்சுகலில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபரும் மைய வலதுசாரியுமான மார்சிலோ ரெபெலோ டிசோசா மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். கொரோனா காலமென்பதால் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வழக்கத்தைவிட அதிகப்படியான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கட்டாய முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆனாலும் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.இது அண்மையில் நடந்த தேர்தல்களில் மிகவும் குறைந்த சதவீத வாக்குப்பதிவு ஆகும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கின.அதன்படி அதிபர் மார்சிலோ ரெபெலோ டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.