போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. இந்த ஆபரேஷனுக்குப்பின் அவர் உடல் நலம் தேறி வருவதாக வாடிகன் அறிவித்து உள்ளது.
இது குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி நேற்று கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும் மற்றும் திருப்திகரமாகவும் உள்ளது. அவர் உணவு எடுத்துக்கொள்கிறார்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வாழ்த்து கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை நேற்று கூறியிருந்தது.ஏராளமானோர் தனக்காக பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்தும் தெரிவித்து வருவது கண்டு போப் ஆண்டவர் நெகிழ்ந்து போயிருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.