பொலிகண்டியை வந்தடைந்தது அகிம்சை வழி பேரணி!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு வந்தடைந்தது.வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறுகிய கால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின.தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர்.எனினும் திட்டமிட்டபடி கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் கொட்டும் மழையில் பேரணி ஆரம்பமாகி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.பேரணிக்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கி எந்தவொரு குழப்பநிலைகளும் ஏற்படாது முன்னெறியது. இந்து, கிருஸ்தவ மதகுருமார்கள் முன்னின்று பேரணியை நடத்தினர்.பொலிஸாரின் தடைகளும் சில விசமிகளின் கல்லெறி, ஆணிகளைத் தூவி வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்ட போதும் மக்கள் எழுச்சியால் அவை பயனற்றுப் போய்விட்டன.பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது வாழ்வுரிமையையும் போரின் பின்னரும் தொடரும் அடக்குமுறைக்கு எதிராக கிளந்தெழுந்தனர்.அதனால் தனது இலக்கை பேரணி அடைந்தது. குறுகிய நாள் அழைப்பில் மக்கள் தமது பேராதரவை வழங்கி ஆட்சியாளர்களுக்குப் சர்வதேச சமூகத்துக்கும் தமது வாழ்வுரிமையை ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *