பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம்

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13-ம் நாள் அன்று, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு, மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)- ன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்சை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *