ஐக்கிய அரபு அமீரக நாட்டில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது, அநாகரீக உடை அணிவது போன்றவற்றிற்கு தடை உள்ளது.இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயின் மெரினா பகுதியில் பால்கனியில் பெண்கள் கும்பலாக நிர்வாண போஸ் கொடுத்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவும், படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.இந்த பெண்கள் விளம்பரத்திற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் நாட்டை சேர்ந்த 12 பெண்கள், ரஷ்யாவை சேர்ந்த 1 ஆண் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக பொது ஒழுக்கச் சட்டத்தை மீறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும் சுமார் 1,000 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அரசுடன் உக்ரைன் மற்றும் ரஷ்ய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. அதன்பின்னர் கைது 12 பெண்கள் உள்பட 13 பேரையும் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், விடுதலை செய்யப்பட்ட உடன் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக துபாய் தகவல்தொடர்பு அலுவலகம் வெளியிட்ட பதிவில், ஐக்கிய அரபு அமீரக சட்டங்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற புகைப்பட நிகழ்ச்சி தொடர்பாக அரசு தரப்பு விசாரணையை நிறைவு செய்துவிட்டது. இந்த புகைப்பட நிகழ்ச்சியில் தொடர்புடைய அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இது தொடர்பாக வேறு கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படாது’ என கூறப்பட்டுள்ளது.