தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று நள்ளிரவில், போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். அவரை கொலை செய்தது வெளிநாட்டுக் காரர்கள் என்றும், அவர்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த படுகொலையை, ‘மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என கண்டனம் தெரிவித்துள்ள ஜோசப், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஹைதி நாட்டில் சமீப காலமாக வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் நாட்டின் தலைநகர் போர்ட்டொ பிரின்சில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் ஜோவெனல் மாய்சே கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்தே அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.அரசியல் நெருக்கடி மற்றும் ஆயுதக் கும்பல்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையிலான கடத்தல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.