தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்

கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது.

இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் சிலரின் ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சமூக வலைதள பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டாக்டர் அரவிந்த் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு.

நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இந்த நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை.

பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை.

ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.

உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை.

நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன்.

ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் அரவிந்த்.இப்பதிவு பலரை சிந்திக்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *