சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி அவர் விடுவிக்கப்படுவார் என்று சிறைத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.பின்னர்.போதிய வசதியில்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது .சிறையில் இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது கேள்வியாகவே இருந்தது .பின்னர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது சில நாட்களில் சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது. ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடக்கிறார் என தெரிவித்திருந்தனர்
.இந்தநிலையில் சசிகலாவின் தண்டனை காலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முடிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவரை அங்கிருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார்.சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை சிறைத்துறை அதிகாரிகள் உள்துறையிடம் தெரிவித்தனர்.சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவை சந்திக்க சென்றபோது டி.டி.வி.தினகரன், வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் ஆகியோரும் சென்று சசிகலாவை சந்தித்தனர்.சசிகலாவுக்கு இதுவரை இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பும், பெங்களூரு போலீஸ் பாதுகாப்பும் அவருக்கு போடப்பட்டு இருந்தது. தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவரது பாதுகாப்பை பெங்களூரு போலீசார் கவனித்துக்கொள்வார்கள்.சசிகலா அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாசுகி ராஜராஜன், கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான மனு மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் அவர் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் பிப்ரவரி மாதம் முதல்வாரம் அவர் சென்னை திரும்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வந்தது . சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசிக்கு பிப்ரவரி 5-ந் தேதி தண்டனை காலம் முடிந்தது .இதையடுத்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார் . எனவே இளவரசியுடன் சேர்ந்து சசிகலா சென்னை திரும்புகிறார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று இளவரசி விடுதலை ஆனார். இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். சிறையின் முன்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகி உள்ளனர். சுதாகரனுக்கு அபராத தொகையை ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி உள்ளது. விரைவில் சுதாகரன் சார்பில் அபராத தொகை செலுத்தப்படும். அவரும் கூடிய விரைவில் விடுதலை ஆவார்.சிறையில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆன போது அவர்களுக்கு சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை சான்றிதழில், 2 பேரின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் சிறையில் தோட்ட வேலைகளை செய்வது மற்றும் கன்னடத்தை படித்து தேறி உள்ளனர். இதற்காகவும் அவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.அ.தி.மு.க.வின் கொள்கைகள் மற்றும் விதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டும் தான் கட்சி கொடியை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படவில்லை. அ.தி.மு.க. பொது செயலாளராக சசிகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு தற்போது தான் சிட்டி சிவில் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் சசிகலா காரில் அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி சென்றதும், அவர் அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதும் தவறு இல்லை.சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதால் என்ன சர்ச்சை உருவானது? ஆரம்பத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர்கள், தற்போது சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியது பற்றி எதுவும் கூறவில்லை. சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் கூறவில்லை.
சசிகலா அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று கூறியுள்ளனர். அவர் சிறையில் இருக்கும் போது எப்படி இது முடியும்?. அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். அவர் விரைவில் மக்களை சந்திக்கவும் உள்ளார்.சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதை பதற்றமாக எடுத்து கொள்ளாமல் அ.தி.மு.க.வினர் அதை பெருமையாக எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.